ஈப்போ, மார்ச்.25-
பேராக் மாநிலம், லாஹாட், டேசா பெங்காலான் தீமா பகுதியில், இரத்த வெள்ளத்தில் உதவி கோரிய பெண் ஒருவரின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியுள்ளது.
ஆபத்தான சூழ்நிலையில், பொதுமக்களிடம் அப்பெண் உதவி கோருவது போன்ற காணொளியை ஹைக்கால் என்பவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் நஜீப் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.50 மணியளவில், உள்ளூர் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், மது போதையில் இருந்ததாக நம்பப்படும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறே இச்சம்பவத்திற்கானக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், குற்றவியல் சட்டம் பிரிவு 323-இன் கீழ் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக முஹமட் நஜீப் தெரிவித்துள்ளார்.








