புத்ராஜெயா, மே 24-
நாட்டின் பிரதமராக தாம் பதவி வகித்த காலத்தில் லஞ்ச ஊழல்கள் இருந்துள்ளன என்ற போதிலும் எல்லா நிலைகளிலும் லஞ்ச ஊழலிருந்து விடுப்பட்ட ஒரு தூய்மையான மனிதராக தம்மை உருவாக்கிக் கொண்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
வேண்டியவர்களுக்கு அரசாங்க குத்தகைகளை கொடுத்து விட்டேன் என்ற ஒரு குற்றச்சாட்டு வந்து விடக்கூடாது என்பதற்காகவே அரசாங்கம் சம்பந்தப்பட்ட வணிகங்களில் தனது குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டு விடக்கூடாது என்பதை எல்லா நிலைகளிலும் உறுதி செய்து கொண்டதாக 98 வயதான துன் மகாதீர் கூறினார்.
இதன் காரணமாக, தாம் பதவி வகித்த காலத்தில் தாம் ஊழலில் ஈடுபட்டதாக சில தரப்பினர் பகிரங்கமாக குற்றச்சாட்டினாலும், அந்த குற்றச்சாட்டுக்களை அவர்களால் ஒரு சதவீதம் கூட நிரூபிக்க முடியவில்லை என்று CNBC செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில் துன் மகாதீர் மேற்கண்டவாறு அறிவித்தார்.
அந்த ஊழல் ஒரு காசாக இருந்தாலும் அவர்களால் எந்தவொரு ஆதாரத்தையும் காட்ட முடியவில்லை. அந்த அளவிற்கு ஒரு தூய்மையான மனிதராக தம்மை செதுக்கிக் கொண்டதாக துன் மகாதீர் தெரிவித்தார்.
இந்த நிமிடம் வரையில் தாம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று தமது இரு மகன்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் -மினால் விசாரிக்கப்பட்டு வருவது தொடர்பில் கருத்துரைக்கையில் துன் மகாதீர் இதனை கூறினார்.








