டாமான்சாரா, ஜூன் 04-
ஆட்டிசம் குறைபாடு உடைய 6 வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதியின் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், போலீசின் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுவரும் அவரது பெற்றோரை இனி தாம் பிரதிநிதிக்க போவதில்லை என வழக்கறிஞர் மஹ்மூத் ஜுமாஅத் தெரிவித்துள்ளார்.
தவிர்க்க முடியாத காரணத்தால் தாம் அம்முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ள அவர், அம்முடிவை எடுத்ததற்கான காரணத்தை விவரிக்கவில்லை.
சிறுவன் ஜெய்ன் ரய்யான் குறித்த மரண விசாரணை, நடப்பிலுள்ள சட்ட நடைமுறையின் கீழ் சுமூகமாக நடைபெற வேண்டும். விசாரணை முறையாக நடைபெறுவதற்கு வழிவிடும் வகையில், அனைத்து தரப்பினர்களும் பல்வேறு ஆருடங்களை முன்வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென மஹ்மூத் ஜுமாஅத் கேட்டுக்கொண்டார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, சிலாங்கூர், டாமான்சாரா டாமாய்-லுள்ள அடுக்ககத்திற்கு அருகாமையில் இருந்த கால்வாயில் சிறுவன் ஜெய்ன் ரய்யான் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அது குறித்து விசாரணையை நடத்திவந்த போலீஸ், கடந்த வெள்ளிக்கிழமை அவரது பெற்றோரை விசாரணைக்காக கைது செய்தது.








