செராஸ், மே 03-
செராஸ், ஜாலான் குவாரி, தாமான் பிங்கிரான் சேராஸ்- சில் தனது இரண்டு வயது பெண் குழந்தையை சித்ரவதை செய்து படுங்காயத்தை விளைவித்ததாக நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி பாதிக்கப்பட்ட குழந்தையின் 58 வயது பாட்டி இதுக்குறித்து காவல்நிலையத்திற்கு புகார் அளித்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, 37 வயது அக்குழந்தையின் தந்தையை அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு பிரிவின் காவல்துறை அதிகாரிகளால் ஜாலான் குவாரியில் கைது செய்யப்பட்டதாக முகமது அசாம் கூறினார்.
கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு தலையிலும் உடலிலும் ஏற்பட்ட பலத்த காயங்களினால் பாதிக்கப்பட்ட அக்குழந்தை அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முகமது அசாம் கூறினார்.
கைது செய்யப்பட்ட அந்நபர் நேற்று தொடங்கி மே 8 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








