பினாங்குத் தீவின் தென்கரையோரத்திற்கு அப்பால் அமையவிருக்கும் சிலிகோன் இஸ்லான் செயற்கைத் தீவு உருவாக்கத்தில் சுற்றுச்சூழல் உட்பட அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் செள கோன் யோவ் உறுதி கூறியுள்ளார்.
அந்த செயற்கை தீவு உருவாக்கத்தினால் எதிர்மறையான தாக்கங்களை தவிர்ப்பதற்கு அனைத்துத் துறைகளிடமிருந்தும் தேவையான ஒப்புதல்களை பினாங்கு அரசு பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிலிகோன் இஸ்லான் திட்டத்தின் பூர்வாங்கத் தொடக்கப்பணிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடக்கப்பட்டது தொடர்பில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் செள கோன் யோவ் இதனைத் தெரிவித்தார்.
சிலிகோன் இஸ்லான் தீவின் உருவாக்கத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 71 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
920 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் சிலிகோன் இஸ்லான், பினாங்கின் புகழ்பெற்ற தொழில்நுட்ப மையமாக விளங்கவிருக்கிறது. இதன் மூலம் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதுடன் பினாங்கு மாநிலத்தின் பொருளியல் வளர்ச்சிக்கு புதிய பரிணாமத்தை தர வல்லதாக இருக்கும் என்று செள கோன் யோவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.








