புக்கிட் சாங்காட் ஆசா பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 19 வயது பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்போது குனுங் பத்து புத்தேவில், மலையேற்றத்தின் போது மாயமான மற்றொரு பெண்ணைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
அடுத்தடுத்து நிகழ்ந்த இச்சம்பவங்களால், தற்போது மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் மத்தியில் அதன் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.
கடந்த மே 23-ஆம் தேதி, குனுங் பத்து புத்தேவில், மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 49 வயதான ஜாஸ்லிண்டா சாலுடின் என்ற பெண் மாயமான நிலையில், அவரைத் தேடும் பணிகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகின்றன.
தேடுதல் மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 8 வீரர்களோடு, ஹெலிகாப்டர் ஒன்றும், தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6 மணியோடு நிறுத்தப்பட்ட தேடுதல் பணிகள், இன்று காலை 8 மணி தொடங்கி மீண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.








