காஜாங், மே.27-
நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட 77 குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைமை இயக்குனர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
கடமையை மீறுதல், அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், தகுதி பாராமல் ஆதாரங்களுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், விடுமுறை நாட்களில் வெளிநாட்டினர் அதிகம் கூடுவதால் அவர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேறிகள் என்று அர்த்தமல்ல என்றும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோக்கள் தவறான பிம்பத்தை உருவாக்குவதாகவும் டத்தோ ஸாகாரியா கூறினார்.
கடந்த ஜனவரி முதல் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனைகளில், ஆவணங்கள் இல்லாத 17 ஆயிரத்து 313 வெளிநாட்டினரும், அவர்களுக்கு அடைக்கலம் தந்த 789 முதலாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் விளக்கினார்.








