May 22, 2026
Thisaigal NewsYouTube
ஸ்லிம் ரிவர் அருகில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது இருவர் காயங்களுடன் உயிர்தப்பினர்
தற்போதைய செய்திகள்

ஸ்லிம் ரிவர் அருகில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது இருவர் காயங்களுடன் உயிர்தப்பினர்

Share:

பேராக், மே 04-

பயிற்சியின் போது, இலகு ரக விமானம் ஒன்று, பேராக், ஸ்லிம் ரிவர் அருகில் சுங்க்காய், லாடாங் பெசாவுட் 2 தம்பாஹான் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது.

எனினும் அந்த பயிற்சி விமானத்தில் இருந்த ஓர் ஆண் பயிற்றுநரும், ஒரு பெண் பயிற்சியாளரும் காயத்துடன் உயிர்தப்பியுள்ளனர். அவ்விருவரும் ஸ்லிம் ரிவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹாசன் பஸ்ரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். Cessna 172 Skyhawk என்ற இலகு ரக விமானம் சம்பந்தப்பட்ட இந்த விபத்து காலை 9.55 மணியளவில் சுங்க்காய், குநோங் பெசுட், ஃபெல்டா நிலக்குடியேற்றப்பகுதிக்கு அருகில் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தகவல் கிடைத்து சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர், காலை 11.10 மணியளவில் அந்த இலகு ரக விமானத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய இருவரையும் பாதுகாப்பாக மீட்டு, நான்கு சக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்ததாக யுஸ்ரி ஹாசன் தெரிவித்தார்.

விமானப் பயிற்றுநரான 26 வயது கேப்டன் ஷாருல் இம்ரான் இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ள வேளையில் விமானப் பயிற்சியாளரான 20 வயது லெ ஹோ ஜியா என்ற பெண்ணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இலகு ரக விமானம், Layang- Layang Flying Academy நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். அந்த பயிற்றுநரும், பயிற்சியாளரும் காலை 7.54 மணியளவில் ஈப்போ, சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, ஸ்லிம் ரிவர் வான் போக்குவரத்துப் பாதையில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக மலேசிய வான்போக்குவரத்து இலாகா தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தின் நேரடி கண்காணிப்பில் இருந்த அந்த இலகு ரக விமானம், Slim River பகுதியில் பறந்து கொண்டிருந்த போது ஆகக்கடைசியாக காலை 9.35 மணியளவில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அவ்விலாகா தெரிவித்துள்ளது.

அந்த Cessna 172 Skyhawk இலகு ரக விமானம், சிலிம் ரீவர் வான் போக்குவரத்துப் பாதையிலிருந்து பிடோர்- ரை நோக்கி திரும்புவதற்கு திட்டமிட்டு இருந்த வேளையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.

இவ்விபத்திற்கான காரணங்களை கண்டறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவ்விலாகா இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News