கூலிம், பிப்ரவரி.16-
போலீஸ் நிலையத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 32 வயதுடைய பெண் ஒருவர், கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை சுங்கை கோப் போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, நூர் அய்னி முஹமட் நோர் என்ற அந்தப் பெண் மீது மூன்று வெவ்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
போலீஸ் நிலையத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டது, பணியில் இருந்த போலீஸ்காரரைத் தாக்கி காயம் ஏற்படுத்தியது மற்றும் போலீஸ் நிலையப் புகார் பிரிவின் கண்ணாடிக் கதவை உடைத்துச் சேதப்படுத்தியது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் அந்த மாதுவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டது.
மாஜிஸ்திரேட் நூர் ஹமிஸா மாட் ஷா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த மாது, தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட போதிலும், வழக்கின் சில அம்சங்களை அவர் மறுத்ததால் மாஜிஸ்திரேட் தனது தீர்ப்பை ஒத்தி வைத்தார்.








