இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு University Utara Malaysia பல்கலைக்கழக மாணவியான எஸ். வினோஷினி, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்று கூறப்பட்டாலும், அவர் மின்சாரம் தாக்கிதான் இறந்தார் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று அந்த வட மலேசிய பல்கலைக்கழகம் தனது தற்காப்பு வாதத்தில் தெரிவித்துள்ளது.
போலீசார் மற்றும் சுயேச்சை எரிசக்தி ஆணையத்தின் விசாரணை முடிவின்படி, கிள்ளானைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவி வினோஷினி, மின்சாரம் தாக்கி இறந்துள்ளார் என்பதற்கான ஆதாரத்தை காட்டவில்லை என்று அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அந்த மாணவி நுரையீரல் சார்ந்த மாரடைப்பு ஃபைப்ரோஸிஸ் நோயினால் அவதியுற்று வந்ததாகவும், இந்நோயின் தாக்கத்திற்கு ஆளானவர்கள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தவிர, கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் அந்த மாணவி இறந்து கிடந்த இடமான கெடா, சின்டோக்- கில் உள்ள University Utara Malaysia பல்கலைக்கழக வளாக மாணவர் தங்கும் விடுதியில், அந்த மாணவி மின்சாரம் தாக்கிதான் இறந்தார் என்பதற்கு இதுவரையில் எந்தவொரு ஆதாரமும் காட்டப்படவில்லை என்றும், அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்த பல்கலைக்கழகம் வாதிட்டள்ளது.
தனது மகள் வினோஷினி மின்சாரம் தாக்கி இறந்ததற்கு அப்பல்கலைக்கழகமே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி, அம்மாணவியின் தந்தை ஆர். சிவக்குமார் 30 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி இழப்பீடு கோரி தொடுத்துள்ள சிவில் வழக்கில் அந்த பல்கலைக்கழகம் தனது தற்காப்பு அபிடெவிட் மனுவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.








