கோலாலம்பூர், மெஞ்சலாரா பகுதியில் சுமார் 85.9 மில்லியன் ரிங்கிட் செலவில் இரண்டாவது புதிய வகை சுகாதார கிளினிக் கட்டப்படவுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் இன்று அறிவித்தார்.
இன்று கெப்போங், மெஞ்சலாரா தீயணைப்பு நிலையத்திற்கு வருகை தந்த டாக்டர் சுல்கிப்ளி , இத்திட்டம் 13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். இந்த நிகழ்வில் கூட்டரசு பிரதேச அமைச்சரும் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹன்னா இயோவும் உடன் கலந்துகொண்டார்.
சுமார் 2.04 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த நவீன கிளினிக், வரும் 2032-க்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிகாம்புட், பத்து மற்றும் டாமன்சாரா பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 56 ஆயிரம் மக்கள் நேரடிப் பயன் பெறுவர் என்று அமைச்சர் விளக்கினார்.
ஒரே கூரையின் கீழ் வெளிநோயாளி சிகிச்சை, அவசரப் பிரிவு, தாய்-சேய் நல மையம் மற்றும் பல் மருத்துவம் எனப் பல்நோக்குச் சேவைகளை வழங்கவுள்ள இந்த கிளினிக், ஜின்ஜாங் மற்றும் பத்து மூடா போன்ற அருகிலுள்ள கிளினிக்குகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கப் பெரும் உதவியாக இருக்கும் என அமைச்சர் விவரித்தார்.
மக்களுக்குத் தரமான மற்றும் சமமான சுகாதாரச் சேவையை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், இப்புதிய கிளினிக், ஒரு முழுமையான மற்றும் நவீன மருத்துவச் சமூகத்தை உருவாக்குவதற்கான முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் டாக்டர் சுல்கிப்ளி நம்பிக்கை தெரிவித்தார்.











