கோலாலம்பூர், மே 30-
கடந்தாண்டுடன் ஒப்பிடுகளையில், இவ்வாண்டின் முதல் காலாண்டில் சமுகநல பாதுகாப்பு அமைப்பு - சொக்சோவில் சந்தாதாரர்களாக பதிந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 6 மடங்குகள் அதிகரித்திருப்பதாக, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
சொக்சோவின் கீழ் உள்ள அனைத்து பிரிவு சமூகநல பாதுகாப்புகளையும் உட்படுத்தி 471 ஆயிரம் பேர் சந்தாதாரர்களாக பதிந்துக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
அது தவிர, சொக்சோவின் மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள MYFUTUREJOBS எனப்படும் தேசிய வேலை வாய்ப்பு சேவை தளத்தின் வழி, வேலை வாய்ப்பைப் பெற்றவர்களின் எண்ணிக்கையும் 152 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் மட்டுமே 39 ஆயிரத்து 136 பேர் அதன் வழி வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். கடந்தாண்டு அவ்வெண்ணிக்கை 15 ஆயிரத்து 520 பேராக இருந்தது.
மேலும், பணிக்குத் திரும்பும் திட்டத்தின் மூலம் சமூகநல காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் பங்களிப்பு விகிதமும் 1.5 விழுக்காடாக அதாவது 608 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதை, ஸ்டீவன் சிம் சுட்டிக்காட்டினார்.








