வருமான வரியை, தாம் செலுத்தவில்லை என்று கூறி காணொளி வெளியிட்டதாக கூறப்படும் டிஏபி- யின் முன்னாள் அரசியல்வாதி சதீஸ் முனியாண்டிக்கு எதிராக ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி போலீஸ் புகார் செய்துள்ளார்.
பினாங்கு , பாகான் டாலாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சதீஸ் முனியாண்டி, தமக்கு எதிரான குற்றச்சாட்டை, காணொளி வழி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதாக சரஸ்வதி கந்தசாமி குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிராக கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆராயாமல் ஒரு லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி வருமான வரியை செலுத்தாமல் தாம் இருந்து வருவதாக கூறி, வாட்சப்- பிலும் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் குறிப்பட்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தை சேர்ந்த ஓர் அரசியல்வாதி மற்றும் துணை அமைச்சர் என்ற முறையில் தமது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் தீய நோக்குடன் இத்தகைய பொய்யான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக சரஸ்வதி கந்தசாமி குற்றஞ்சாட்டினார்.
துணை அமைச்சர் சரஸ்வதி நேற்று மாலை 3.45 மணியளவில் போலீஸ் புகார் செய்து இருப்பதை புத்ராஜயா மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மதி அப்துல் அஜீஸ் இன்று உறுதிபடுத்தினார். இப்புகார், குற்றவியல் சட்டம் 500 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








