கோலாலம்பூர், ஜூன்.16-
ஒரு வர்த்தகப் பெண்மணியான டத்தின்ஸ்ரீ பமேலா லிங்கை புத்ராஜெயாவில் எஸ்பிஆர்எம் தலைமை அலுவலகத்திற்கு அருகாமையில் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் ஒன்று, தாய்லாந்து எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது தொடர்பாக எந்த தகவலும் அமலாக்க அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை என்று அவரின் வழக்கறிஞர் குழுவினர் கூறுகின்றனர்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமை அலுவலகத்திற்கு விசாரணைக்குச் செல்வதாக கோலாலம்பூர், செராஸில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்ட 32 வயது பமேலா லிங் வீடு திரும்பவில்லை. அவர் மர்மான முறையில் காணாமல் போனதாகக் தெரிவிக்கப்பட்டது.
எனினும் பமேலாவைத் தனது வாகனத்தில் ஏற்றிச் சென்ற இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர், தனது காரை மறித்து, இரு வாகனங்களில் வந்தவர்கள், அந்த வர்த்தகப் பெண்மணியைக் கடத்திச் சென்றதாகப் போலீஸ் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் பமேலாவைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனம், தாய்லாந்து எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அவரின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் சங்கீட் கோர் தியோ தெரிவித்துள்ளார்.








