பெட்டாலிங் ஜெயா, மே 08-
முஸ்லீம் அல்லாத மதங்களை இழிவுப்படுத்தும் செயல்கள் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணும் 24 மணி நேர ஹோட் லைன் சேவையை தொடங்கும் திட்டம் எதனையும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு கொண்டிருக்கவில்லை என்று அதன் அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தை அவமதிக்கும் நபர்கள் தொடர்பாக புகார் ளிப்பதற்கு ஓர் அரசாங்க இலாகாவான JAKIM, ( ஜாக்கிம் ) எனப்படும் இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா இது போன்று 24 மணி நேர ஹோட் லைன் சேவையை முன்பு தொடங்கியது.
அதேபோன்று முஸ்லிம் அல்லாத மதங்களை சிறுமைப்படுத்தி, இழிவுப்படுத்தும் நபர்களுக்கு எதிராக உடனடியாக புகார் அளிப்பதற்கு 24 மணி நேரம் செயல்படக்கூடிய ஹோட் லைன் சேவையை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு தொடங்குமா? என்று சபாவைச் சேர்ந்த துவாரன் எம்.பி. வில்பிரட் மேடியஸ் டாங்காவ் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங், இது போன்ற விவகாரங்களை கையாளுவதற்கு அமைச்சு ஏற்கனவே சில செயல்திட்டங்களை வடிவமைத்துள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக, தேசிய ஒற்றுமைக்கு ஊறுவிக்கும் விவகாரங்களை கண்டறியவும், அப்பிரச்னைகளை கையாளவும், உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் e-Sepakat முறையை அமைச்சு கொண்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்த முறையின் கீழ் கிடைக்கப்பெறுகின்ற தகவல்களை ஆய்வு செய்து, வாராந்திர அறிக்கை தயாரிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவ்விவரங்கள் போலீஸ் துறை மற்றும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக டத்தோ ஆரோன் அகோ டாகாங் தெரிவித்தார்.








