கோலாலம்பூர், மே 28-
மலேசியாவிற்குள் நுழையும் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து சாலை மற்றும் பெர்மிட் கட்டணம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
தரைமார்க்கமாக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் வாகனங்கள் VEP எனப்படும் வாகன நுழைவு உரிம முறையைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் பதிவுசெய்யப்படாத வாகனங்கள் தரைமார்க்கமாக எல்லைகளைக் கடக்கும்போது VEP முறையைப் பயன்படுத்த வேண்டும். உட்லண்ட்ஸ் காஸ்வே கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்பு ஆகிய இரண்டு நிலவழி எல்லைகளைக் கடக்கும் வாகனங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.
VEP - RFID சின்னங்களுக்கு அடுத்த நான்கு மாதங்களில் பதிவு செய்து, அவற்றை வாகனங்களில் பொருத்தி, செயல்படுத்துமாறு எல்லா வெளிநாட்டு வாகன உரிமையாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
நுழைவு அனுமதிக்கான பெர்மிட்டை பெற தவறுகின்ற வெளிநாட்டு வாகனங்களின் உரிமையாளர்களுக்கு 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் தலா 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.








