ஜார்ஜ்டவுன், மார்ச்.25-
பினாங்கில் உள்ள சீனக் கல்லறை ஒன்றில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட ஆணும் பெண்ணும் நாளை ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.
37 வயது பெண்ணும், 58 வயது ஆணும் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் சட்டம் 377D- பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்படவிருக்கிறது.
பொது இடத்திலோ அல்லது தனிமையிலோ ஒழுங்கீனமாக நடந்து கொள்வதைக் குற்றமாகக் கருதும் இப்பிரிவின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
சீனக் கல்லறை ஒன்றில் இந்த ஜோடி ஆபாச செயலில் ஈடுபடும் காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பினாங்கில் ஓர் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டதை வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரோஸாக் முஹமட் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, இவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் மூன்று நாள் தடுப்புக் காவல் அனுமதியை நீதிமன்றத்தில் பெற்றிருந்தனர்.








