பெட்டாலிங் ஜெயா, மே 28-
அமைச்சர் ஒருவரின் கணவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அரசாங்க குத்தகை வழங்கப்பட்டது தொடர்பில் புகார் இருக்குமானால், அது குறித்து விசாரணை செய்யலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
மற்ற வழக்குகளின் தன்மையைப் போல் இதுவும் இருக்குமானால் அது குறித்து விசாரணை செய்யலாம் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ-வின் கணவர் ராமச்சந்திரன் முனியாண்டி தலைமை செயல்முறை அதிகாரியாக இருக்கும் Asia Mobiliti, Technologies Sdn. Bhd. நிறுவனத்திற்கு சிலாங்கூர் மாநில அரசின் இரண்டு குத்தகைகளில் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக வெளியான சர்ச்சை தொடர்பில் கருத்து கேட்ட போது பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பாக நேற்று பேசிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கிஅஸாம் பாக்கி, அமைச்சராக இருக்கும் ஹன்னா இயோ சம்பந்தப்பட்ட இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் குத்தகையை அவரின் கணவர் இராமச்சந்திரன் முனியாண்டிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்குமானால் அது குறித்து விசாரணை செய்யலாம், ஆனால், இது சிலாங்கூர் மாநில அரசின் குத்தகை என்பதால் அதில் குற்றம் இருப்பதாக அறிய முடியவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
அஸாம் பாக்கியின் இந்த பதிலில் அதிருப்தி அடைந்த பலர், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருக்கும் ஹன்னா இயோவின் கணவருக்கு ஒரு மாநில அரசின் குத்தகையை எவ்வாறு வழங்க முடியும், அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்று SPRM- மை கேட்டுக்கொண்டுள்ளனர்.








