Nov 19, 2025
Thisaigal NewsYouTube
கட்டுமான மேலாளர் சுரேஸைத் தேடும் பணி நாளை முடுக்கிவிடப்படும்
தற்போதைய செய்திகள்

கட்டுமான மேலாளர் சுரேஸைத் தேடும் பணி நாளை முடுக்கிவிடப்படும்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.19-

கடந்த திங்கட்கிழமை மாலையில் சுங்கை கிளாங் ஆற்றின் சலோமா பாலத்தின் கீழ் நின்று கொண்டு இருந்த போது, திடீரென்று கரைபுரண்டோடிய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக நம்பப்பபடும் 34 வயது கட்டுமான மேலாளர் கே. சுரேஸைத் தேடும் பணி நாளை வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்படவிருக்கிறது.

இன்று காலையில் சுரேஸின் Four-wheel drive Pajero Mitsubishi வாகனம் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்ட வேளையில் அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சம்பவ இடத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் சுரேஸின் வாகனம் மூழ்கிய நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர், டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.

சிலாங்கூர் ரவாங்கைச் சேர்ந்த 34 வயது சுரேஸ், நன்கு நீச்சல் தெரிந்தவர் என்றும் பலருக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார் என்றும் அவரது சகோதரர் கே. சுரேன் தெரிவித்துள்ளார்.

எனினும் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் அதனை எதிர்கொள்வதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டு இருக்கலாம் என்று சுரேன் குறிப்பிட்டார்.

சுரேஸைத் தேடும் பணியில் தீயணைப்பு, மீட்புப்படை, பொது தற்காப்புப்படை, அரச மலேசிய போலீஸ் படை மற்றும் 21 முக்குளிப்பவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் கனத்த மழை பெய்து கொண்டு இருந்த போது, கோலாலம்பூர் கம்போங் பாருவிற்கு அருகில் சுங்கை கிளாங் ஆற்றில் சலோமா பாலத்தின் கீழ் கட்டுமானத் தளத்தில் நின்று கொண்டு இருந்த சுரேஷ் மற்றும் 11 அந்நிய நாட்டவர்களும் ஆற்றில் திடீரென்று உயர்ந்த நீர் மட்டத்தில் சிக்கிக் கொண்டனர்.

தீயணைப்பு, மீட்புப்படைக்குத் தகவல் அளிக்கப்பட்டு 11 அந்நியப் பிரஜைகளும் கயிற்றின் உதவியுடன் காப்பாற்றப்பட்ட வேளையில் தனது வாகனத்தை நகர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்த சுரேஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

Related News