மலாக்கா மாநில சட்டமன்றம் உடனடியாக கலைக்கப்படும் வாய்ப்பு இல்லை என அம்மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப் ரவூப் யுசோஹ் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்கள், தேர்தலை நோக்கி தயாராகி வரும் நிலையில், மலாக்கா தனது அரசியல் கால அட்டவணையின் படியே செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்வதிலும் மாநில அரசு தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கு உதவுவதற்காக தங்களின் கட்சி இயந்திரத்தை அனுப்பவுள்ளதாகவும் அப் ரவூப் யுசோஹ் தெரிவித்துள்ளார்.
அந்தத் தேர்தல்கள் முடிந்த பிறகு, மலாக்கா மாநிலத் தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான நேரத்தை பரிசீலிக்கவுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை மஸ்ஜித் தானா, கம்பங் புலாவ்விலுள்ள தனது இல்லத்தில் அப் ரவூப் யுசோஹ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.








