கிள்ளான், ஜூன் 14-
கடந்த மாதம், நான்கு வயது சிறுவன் ஒருவனை அடித்து சித்ரவதை செய்த குற்றத்திற்காக பாலர்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு இரண்டு மாதம் சிறைத்தண்டனை விதிக்க கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
25 வயது எம் மாலினி என்ற அந்த பாலர்பள்ளி ஆசிரியர் மாஜிஸ்திரேட் சித்தி ஜுபைதா மஹத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு இச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சிறைத்தண்டனை அனுபவிக்க சித்தி ஜுபைதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஓராண்டு சிறை அல்லது 2,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 323 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த மே 13 ஆம் தேதி காலை 9.36 மணியளவில் கிள்ளான் அருகிலுள்ள பாலர்பள்ளி ஒன்றில் காற்சட்டையில் மலம் கழித்ததற்காக, நான்கு வயது சிறுவனை வேண்டுமென்றே கன்னத்திலும் உடலின் பின்புறத்திலும் அடித்து காயம் விளைவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.








