கோலாலம்பூர், ஏப்ரல் 30-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் குறைத்துள்ள கூட்டரசு பிரதேச பொதுமன்னிப்பு வாரியத்தின் முடிவுக்கு எதிராக மலேசிய வழக்கறிஞர்கள் அமைப்பு, சட்டநடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட வாரியத்தின் அம்முடிவை ரத்து செய்ய வலியுறுத்தி, அமீர் & ராஜ்பால் காய் வழக்கறிஞர் சேவை நிறுவனம் வாயிலாக, அவ்வமைப்பு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நீதித்துறை சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இதற்கு முன்பு, 1MDB நிதி முறைகேடு தொடர்பில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நஜிப் ரசாக்க்கிற்கு, 12 ஆண்டுகள் சிறையும் 210 மில்லியன் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. அவர் அரச பொது மன்னிப்பை கோரிய பிறகு, அந்த தண்டனை 6 ஆண்டுகள் சிறையாகவும் 50 மில்லியன் வெள்ளியாகவும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், அம்முடிவுக்கு எதிராக மலேசிய வழக்கறிஞர் அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், கோலாலம்பூர், லாபுவான், புத்ரா ஜெயா கூட்டரசு பிரதேச பொதுமன்னிப்பு வாரியம் முதல் பிரதிவாதியாகவும் நஜிப் ரசாக்கை இரண்டாவது பிரதிவாதியாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நஜிப் ரசாக்கிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது சட்டத்தை மீறும் நடவடிக்கை என்றும் அரசியலைமைப்ப்ன் படி அது செல்லாது எனவும் அது கூறியுள்ளது.








