பெட்டாலிங் ஜெயா, மே 04-
DLP எனப்படும் இரட்டை மொழி பாடத் திட்டத்தில் பங்கேற்பதற்கு எந்தெந்த மாணவர்கள் தகுதியுடையவர்கள் என்பதைத் தீர்மானிக்கும் சிறப்பு உரிமை, தற்போது பள்ளி நிர்வாகத்திற்கே கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.
அதேவேளையில் இந்த DLP இரட்டை மொழி பாடத் திட்டத்திற்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கு ஒரு வழிகாட்டலாக மதிப்பீட்டு சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று எந்தவொரு விதிமுறையோ அல்லது நிபந்தனையோ விதிக்கப்படவில்லை என்பதையும் கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
எனினும் DLP வகுப்புகளுக்கு எந்தெந்த மாணவர்கள் தகுதியானவர்கள் என்பதை தீர்மானிப்பதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு பிரத்தியேக உரிமை உள்ளது என்று கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் மொழித்திறனை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு செயல்பாடுகள் மற்றும் பயிற்சிகளின் மூலம் அவர்களின் திறனாற்றல் கண்டறியப்படும்.
DLP வகுப்பில் சேர்வதற்கு அனைத்து மாணவர்களும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றாலும் இதில் தேர்வு செய்யப்படுகின்ற மாணவர்கள் மட்டுமே அந்த இருமொழிப்பாடத் திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இதில் மலாய்மொழியில் அவர்களின் திறமையும் முக்கிய கூறாக கருத்தில் கொள்ளப்படும்.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் திறனாற்றலை அடிப்படையாக கொண்டு அவர்களை தீர்மானிக்கும் உரிமை பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
தங்கள் பிள்ளைகள் DLP வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்று தாங்கள் விருப்பப்பட்டாலும் அந்த வகுப்பில் தங்கள் பிள்ளைகள் சேர்க்கப்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் சிலர் எழுப்பியுள்ள அச்சம் தொடர்பில் கல்வி அமைச்சு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.








