பகாங் மாநிலம் பெந்தோங், புக்கிட் திங்கியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இதுவரை எந்தவொரு சிசிடிவி காட்சிகளும் நேரடி சாட்சிகளும் கிடைக்கவில்லை என அம்மாநில போலீஸ் தலைவர் அஸ்ரி அக்மார் அயூப் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று மூன்று போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
49 வயதுடைய பாதுகாவலர், 45 வயதுடைய சாமியார் மற்றும் 41 வயதுடைய உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் என மூவர் புகார் அளித்துள்ளனர்.
புனிதப் பொருளை சேதப்படுத்தி சமயத்தை அவமதித்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 295-ன் கீழும், இணைய வசதிகளை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-ன் பிரிவு 233-ன் கீழும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தை போலீசார் தீவிரமாகக் கருதுவதாக தெரிவித்த அஸ்ரி அக்மார், சம்பவத்திற்கான காரணத்தையும் இதில் தொடர்புடைய நபர்களையும் கண்டறியும் நோக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.








