கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க, சுமார் 14 ஆயிரம் லஞ்சம் கேட்டுப் பெற்றதாக சந்தேகிக்கப்படும் போலீஸ் அதிகாரி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக மற்றொரு ரோந்து போலீஸ் அதிகாரி ஆகிய இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
30 வயதுகளில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர், நேற்று மாலை 5.30 மணியளவில் தனது வாக்குமூலத்தை வழங்க பகாங் மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்குச் சென்ற போது கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையில், சம்பந்தப்பட்ட ரோந்து போலீஸ் அதிகாரியுடன் இணைந்து அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
லஞ்சப் பணம் மூன்றாம் தரப்பினரின் வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் மூலம் செலுத்தப்பட்டதாகவும், அந்தக் கணக்கு சந்தேக நபரால் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து, அந்த அதிகாரியை வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
அதேவேளையில், கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மற்றொரு ரோந்து போலீஸ் அதிகாரியின் தடுப்புக்காவல் மேலும் நான்கு நாட்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.








