1971 பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டமான எ.யு.கே.யு முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பை மலேசிய மக்கள் உரிமை இயக்கம் ஹராம் என்ற மாணவர் அமைப்பு வரவேற்றுள்ளது.
அதேவேளையில், அந்த சட்டத்தை இரத்து செய்வது முழுமையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
எ.யு.கே.யு-வை ரத்து செய்வதற்கான தெளிவான காலக்கெடுவை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இதுதொடர்பான தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஹராம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம், எ.யு.கே.யு சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும், மாணவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அதற்குப் பதிலாக வேறு எந்தச் சட்டமும் கொண்டு வரப்படாது என்றும் அறிவித்திருந்தார்.
மாணவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், வளாகங்களில் அவர்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை மாணவர்களை குறிவைக்கும் சட்டங்களால் கட்டுப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இது முக்கியமானது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
இதனிடையே, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிப்பதில் அதிக சுதந்திரம் வழங்கப்பட வேண்டும், பல்கலைக்கழகங்களின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் ஹராம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், மாணவர்கள் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிக்க சுயாதீன தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் பிற சட்டங்களையும் அரசாங்கம் மறுஆய்வு செய்ய வேண்டும் என ஹராம் தெரிவித்துள்ளது.
எ.யு.கே.யு சட்டம் மட்டும் ரத்து செய்யப்படுவதால் கல்விச் சுதந்திரம் முழுமையாக உறுதி செய்யப்படாது என்றும், இதேபோன்ற கட்டுப்பாடுகள் பிற சட்டங்களில் தொடர்ந்தால் மாணவர்களின் கல்வி மற்றும் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.








