பள்ளி கட்டுமான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என தன்னை விமர்சித்த வாக்காளருக்கு எதிராக முன்னாள் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ தொடுத்த அவதூறு வழக்கை விசாரணை செய்த அப்பீல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிபதி அஜீஸுல் அஸ்மி அத்னான் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு , சர்ச்சைக்குரிய பதிவில் நேர்மையின்மையை சுட்டிக்காட்டும் கருத்துகள் இடம்பெற்றிருந்தாலும் கூட, அது ஜூன் லியோ வை நேரடியாக குறிக்கவில்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018 முதல் 2022 -ஆம் ஆண்டு வரை Hulu Selangor நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜூன் லியோ, கடந்த 2021ஆம் ஆண்டு எம்.ரவி என்பவருக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
2020-ஆம் ஆண்டு முகநூலில் வெளியிடப்பட்ட பதிவு ஒன்றில், ஹுலு பெர்னாம் பகுதியில் எஸ்.ஆர்.கே.தி ஆஸ்காட் பள்ளி கட்டுமான விவகாரத்தில் ஜூன் லியோ நடவடிக்கை எடுக்கவில்லை என ரவி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், அப்பீல் மனுவை இன்று தள்ளுபடி செய்த நீதிமன்றம், ரவிக்கு வழக்குச் செலவாக 50 ஆயிரம் ரிங்கிட் வழங்குமாறும் லியோ-க்கு உத்தரவிட்டுள்ளது.








