சாலை விபத்துகளால் மலேசியா ஆண்டுதோறும் 30 பில்லியன் ரிங்கிட் வரை சமூக பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.
இந்த இழப்பில் உயிரிழப்புகளால் ஏற்படும் உற்பத்தித்திறன் மற்றும் வருமான இழப்பு, மருத்துவச் செலவுகள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் மீதான தாக்கம் ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், உயிரிழப்பை பண மதிப்பில் அளவிட முடியாது என்றும், கடந்த ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 6,537 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் படி, தினமும் சராசரியாக 18 பேர் உயிரிழப்பதை சுட்டிக் காட்டிய அவர், அவற்றில் 80.6 சதவீத விபத்துகளுக்கு மனிதத் தவறுகளே காரணமாக இருப்பது கவலைக்குரியது என்றும் நந்தா தெரிவித்துள்ளார்.
சாலை பாதுகாப்பு என்பது ஓர் அமைச்சகத்தின் பொறுப்பு மட்டுமல்ல என்றும், கல்வி, சட்ட அமலாக்கம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான அணுகுமுறை தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








