சிலாங்கூரில் பக்காத்தான் ஹராப்பானை வீழ்த்துவதைத் தங்களின் தொடக்கப்புள்ளியாகக் கொண்டு, அந்த வெற்றியை மத்திய அரசியல் களத்துக்கும் கொண்டு செல்லப் போவதாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் கூறியிருப்பதற்கு, சிலாங்கூர் அங்காத்தான் மூடா கெஅடிலாலான ஏ.எம்.கே. கடும் பதிலடி கொடுத்துள்ளது.
சனுசியின் இந்த சவாலை வரவேற்பதாகக் கூறிய ஏ.எம்.கே. சிலாங்கூர் துணைத் தலைவர் முகமது ஷாஹ்ருல் பின் அட்னான், “சிலாங்கூரை கைப்பற்ற விரும்பும் பாஸ், முதலில் மக்களுக்கு தாங்கள் வழங்கப்போகும் திட்டம் என்ன என்பதைச் சொல்ல வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
சிலாங்கூரில் பாஸ் எதிர்க்கட்சியாகவும் மாநில சட்டமன்றத்தில் கணிசமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகவும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சியைப் பிடிக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் பாஸ், அதற்கான தெளிவான கொள்கைகளையும் திட்டங்களையும் முதலில் முன்வைக்க வேண்டும் என்றார்.
ஆட்சி என்பது தேர்தல் இயந்திரங்களையும் பிரசார மேடைகளையும் வைத்திருப்பது மட்டுமல்ல; மாநில வருவாய், பொருளாதாரம், முதலீடு, வீடமைப்பு, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை நிர்வகிக்கும் திறனையும் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சிலாங்கூர் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் மாநிலமாகவும், முதலீடு, தொழில்துறை, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புக்கான முக்கிய மையமாகவும் திகழ்வதாகக் கூறிய ஷாஹ்ருல், இதற்கு வெறும் அரசியல் முழக்கங்கள் காரணமல்ல; தொடர்ச்சியான கொள்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் நிர்வாக நிலைத்தன்மையே காரணம் என்றார்.
மேலும், 2026 முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான சிலாங்கூர் இரண்டாவது திட்டம் (ஆர்.எஸ்-2) அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வருமான உயர்வு, முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட நீண்டகால திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக முகமது ஷாஹ்ருல் குறிப்பிட்டார்.
“சிலாங்கூரை கைப்பற்றுவோம்” என்று பேசுவதற்குப் பதிலாக, பாஸ் கட்சி மாற்று அரசாங்கமாகத் தங்களை முன்னிறுத்த விரும்பினால், கொள்கைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் செயல்திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்று ஷாஹ்ருல் சவால் விடுத்தார்.
குறிப்பாக, முதலீடுகளை அதிகரிப்பது, அதிக ஊதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, வீடமைப்பு, வெள்ளப் பிரச்சினை, போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற பிரச்சினைகளுக்கு பாஸ் வழங்கும் தீர்வு என்ன என்பதை மக்களிடம் விளக்க வேண்டும் என்றார்.
அதேவேளை, சிலாங்கூரில் இனவாத அரசியலுக்கு இடமில்லை என்றும் ஷாஹ்ருல் தெரிவித்தார். மலாய், சீனர், இந்தியர் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் பங்களிப்பாலும் சிலாங்கூர் வளர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறிய அவர், மாநிலத்தின் பன்முகத்தன்மையே அதன் மிகப்பெரிய பலம் என்றும் குறிப்பிட்டார்.
“பாஸ் சிலாங்கூரைக் கைப்பற்ற விரும்பினால், இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டாமல், கொள்கை, திட்டம் மற்றும் நிர்வாகச் சாதனைகளைக் கொண்டு மக்களைச் சந்திக்க வேண்டும். இறுதித் தீர்ப்பை மக்கள் வழங்கட்டும்,” என்று ஷாஹ்ருல் கூறினார்








