சபா மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் இயக்குநர் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரை மருத்துவமனை இயக்குநர் பதவியில் இருந்து நீக்கி, சபா மாநில சுகாதாரத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுல்கிப்ளி அகமது தெரிவித்துள்ளார்.
இந்த நிர்வாக மாற்றம், குற்றச்சாட்டு தொடர்பான முழுமையான விசாரணை தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அமைச்சின் உள்நிலை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பதவி மாற்றத்துக்குப் பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரி சபா சுகாதாரத் துறையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றுவார் என்றாலும், இந்த மாற்றம் அவரது சேவை நிலை அல்லது பதவி தரத்தை குறைப்பதாகாது என்றும் சுல்கிப்ளி தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேவேளையில், விசாரணையில் அவர் தலையிடும் வாய்ப்பைத் தவிர்ப்பதற்காக மட்டுமே மருத்துவமனை இயக்குநர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விவரித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், அதே மருத்துவமனையில் பணியாற்றும் கீழ்நிலை ஊழியர் ஒருவர் இந்த பாலியல் தொல்லை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், குறைந்தது இருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த எண்ணிக்கையை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








