மலேசியாவின் பிரபல சுற்றுத்தளமான கெந்திங் ஹைலேண்ட்ஸ், பெந்தோங் பகுதியில் பெரிய அளவிலான போதைப்பொருள் கும்பல் ஒன்று தடையின்றி செயல்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை பகாங் மாநில போலீசார் மறுத்துள்ளனர்.
இது குறித்து பகாங் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ அஸ்ரி அக்மர் அயூப் வெளியிட்டுள்ள தகவலில், அந்தப் பகுதியில் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாக போலீசுக்கு புகார் கிடைத்தால், உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
பகாங் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறைத் தலைவர் பதவி மாற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டத்தோ ஸ்ரீ அஸ்ரி அக்மர் அயூப் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் ஒன்றில் மிகப் பெரிய போதைப்பொருள் கும்பல் ஒன்று கெந்திங் ஹலேண்ட்ஸ் பகுதியில் செயல்பட்டு வருவதாகவும், பலமுறை போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








