கோலாலம்பூர், மே 04-
12 லட்சத்த 50 ஆயிரம் வெள்ளி ரொக்கப்பணம் கேட்டு மிரட்டியதாக நம்பப்படும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ள குற்றவியல் சம்பவத்தில் மேலும் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஆகக்கடைசியாக ஓர் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு Sarjan கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் உயர் அதிகாரிகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது என்று ஐஜிபி குறிப்பிட்டார்.
எனினும் இந்த கைது நடவடிக்கைக்கான மேல்விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. மொத்தம் 1.25 மில்லியன் வெள்ளி கேட்டு மிரட்டி, அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூன்று போலீஸ் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.
38 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று உயர் போலீஸ் அதிகாரிகளில் உதவி போலீஸ் கமிஷனர், ஒரு DSP மற்றும் ஒரு இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்குவர் என்று டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் விளக்கினார்.
சம்பந்தப்பட்ட மூன்று உயர் போலீஸ் அதிகாரிகளும் கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மூன்று உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு இருப்பதையும் ஐஜிபி சுட்டிக்காட்டியிருந்தார்.








