தொழிலதிபர் வினோத் பாலச்சந்திர சேகர் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான RM30 மில்லியன் சிவில் வழக்கில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சாட்சியமளிக்க வர வேண்டும் என்று கோரி வழங்கப்பட்ட சம்மனை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஏமாற்று வேலை, மோசடி மற்றும் ஒப்பந்த மீறல் ஆகியவற்றைக் கண்டித்து 10 முதலீட்டாளர்கள் மற்றும் 2 முன்னாள் ஊழியர்களால் 2023-இல் இந்த வழக்கு தொடரப்பட்டது.
நீதித்துறை ஆணையர் எட்வர்ட் அப்துல்லா தனது தீர்ப்பில், இவ்வழக்கிற்குப் பிரதமர் ஒரு முக்கிய சாட்சி என்பதை வாதி தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என்று கூறினார். வாதி தரப்பு சமர்ப்பித்த அன்வார் மற்றும் வினோத் ஆகியோரின் புகைப்படங்கள் அல்லது சமூக ஊடகப் பதிவுகள், அவர்கள் இருவருக்குள் இருக்கும் அறிமுகத்தை மட்டுமே காட்டுகிறதே தவிர, இந்த வணிகப் பரிவர்த்தனைகளில் பிரதமருக்கு நேரடித் தொடர்பு இருப்பதை உறுதி செய்யவில்லை என்று அவர் விளக்கினார்.
மேலும், பிரதமரின் பெயர் முதலீடுகளைப் பெற பயன்படுத்தப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பதை வாதி தரப்பு சாட்சியே ஒப்புக்கொண்டுள்ளதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதனால் அன்வாருக்குச் சம்மன் அனுப்பியதை ரத்து செய்த நீதிமன்றம், வாதி தரப்பு, பிரதமருக்கு 20 ஆயிரம் ரிங்கிட் வழக்குச் செலவுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.








