கிள்ளான், தாமான் ஸ்ரீ இஸ்தானா ஹில்ஸ் பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தந்தை மற்றும் அவரது மகன் ஆகிய இருவர் காயமடைந்தனர்.
வீட்டின் மேல் தளத்தில் உள்ள குழந்தைகள் அறையில் இருந்து தீ பரவியதை அடுத்து, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் அதிர்ச்சியுடன் விழித்தெழுந்து தப்பினர். இந்த விபத்தில் 54 வயதுடைய தந்தைக்கு கைகளில் சிறு தீக்காயங்கள் ஏற்பட்டன; அவரின் 28 வயது மகனுக்கு புகை மூட்டத்தினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு கிள்ளான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததுடன், அக்குடும்பத்தினரை பத்திரமாக மீட்கவும் உதவினர். சம்பவ இடத்திற்கு விரைந்த சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் காலை 5.47 மணிக்கு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இந்த விபத்தில் வீட்டின் 70 விழுக்காடு பகுதி முற்றிலும் சேதமடைந்தது.








