நிபோங் திபால், சுங்கை ஜாவி, ஜாலான் தாமான் குவாங் இண்டா சாலையில் இன்று காலை மூன்று டன் மற்றும் ஐந்து டன் எடையுள்ள இரு ஹினோ லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இரண்டு ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர்.
இன்று காலை 7.04 மணிக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இந்த விபத்து குறித்த அவசர அழைப்பு கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த சுங்கை பகாப் தீயணைப்புப் படையினர், கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கடந்து காலை 7.21 மணிக்கு அங்கு வந்தடைந்தனர்.
லாரிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 46 மற்றும் 26 வயதுடைய இரு ஓட்டுநர்களும் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காலை 8.21 மணியளவில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விபத்தில் 46 வயது ஓட்டுநருக்கு தலையில் காயமும் காலில் முறிவும் ஏற்பட்டது. மற்றொரு 26 வயது ஓட்டுநருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே அவர்களுக்கு சுகாதார இலாகா மருத்துவ அதிகாரிகள் முதலுதவி வழங்கியதைத் தொடர்ந்து, இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் சுங்கை பாக்காப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.








