சரவாக், கபிட், பெலகா பகுதியில் புதிய பாகூன்-முரும் சுகாதார மருத்துவமனையை அமைப்பதற்காக, சுகாதார அமைச்சு மற்றும் சரவாக் எனர்ஜி பெர்ஹாட் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று புத்ராஜெயாவில் கையெழுத்தானது.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமது முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சரவாக் எனர்ஜி நிறுவனத்தின் சமூக கடப்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய மருத்துவமனைக் கட்டடமும், நான்கு தொகுதிகளை உள்ளடக்கிய பணியாளர் குடியிருப்புகளும் 24 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, சுகதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளன என்று அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.
தற்போது பாகூன் நீர்மின் நிலையம் தற்காலிக வளாகத்தில் இயங்கி வரும் இம்மருத்துவமனை, புதிய கட்டடத்திற்கு மாறுவதன் மூலம் உள்ளூர் மக்களுக்குச் சிறந்த சுகாதாரச் சேவைகளை வழங்க முடியும் என அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தில் சுகாதார அமைச்சு சார்பில் அதன் தலைமைச்செயலாளர் . டத்தோ ஸ்ரீ ஹஸ்னோல் ஜாம் ஜாம் ஹாஜி அகமது கையெழுத்திட்டார்.













