மலேசியாவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான தூதரக உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதியளித்துள்ளன. தற்போதைய மற்றும் எதிர்கால உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், இரு நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார செழிப்பைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிற்கு வருகை தந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் சென் யிஷின், இன்று புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்து முகநூலில் பதிவிட்டுள்ள பிரதமர் அன்வார், இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் சூழல் குறித்து தாங்கள் விரிவாக ஆலோசித்ததாகத் தெரிவித்தார்.
பிராந்தியத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து அடைந்துள்ள முன்னேற்றங்கள், மலேசியா மற்றும் சீனா இடையிலான உறவை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








