ஹுலு சிலாங்கூர், மே 06-
மே 11 ஆம் தேதி கோல குபு பாரு இடைத்தேர்தலை முன்னிட்டு, பிரச்சாரத்தின் போது மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் - ரின் புகைப்படத்தை பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 6.18 மணியளவில் இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாக ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஹ்மத் பைசால் தஹ்ரீம் கூறினார்.
சம்பந்தப்பட்ட வாகனத்தில் மாமன்னரை அவமதிக்கும் வகையில் அவரின் படத்திற்கு பின்னால் அரசியல் கட்சி கொடிகள் நிறுத்தப்பட்டிருந்ததாக அஹ்மத் பைசால் தெரிவித்தார்.
அந்த காரில் மாமன்னர் உட்பட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் புகைப்படமும் அதற்கு பின்னால் கட்சி கொடிகளும் வைக்கப்பட்டிருந்ததாக அஹ்மத் பைசால் விளக்கினார்.
பச்சை நிற மஸ்டா ரக காரில் பயணித்த அவ்விருவரும் அவதூறு செயல்களை புரிந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
60 வயதிற்கு உட்பட்ட அவ்விருவரும் கைது செய்யப்பட்டு இன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை வரையில் மூன்று நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அஹ்மத் பைசால் மேலும் தகவல் அளித்தார்.








