வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், அத்தொகுதியில் செயல்படக்கூடிய தனது மக்கள் சேவை மையத்தில் அனைத்து இனத்தவர்களின் பிரதிநிதிகளும் பணிக்கு அமர்த்தப்படுவது உறுதி செய்யப்படும் என்று டிஏபி- யை சேர்ந்த பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் பாங் சோக் தவ் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதற்கு முன்பு, தேர்தல் கொள்கை அறிக்கையில் தாம் அறிவித்து இருப்பதைப் போன்று அனைத்து இனத்தவர்கள் சார்பாகவும் ஒவ்வொருவரும் தனது சேவை மையத்தில் அமர்த்தப்பட்டு, மக்கள் பிரச்னைகள் கண்டறியப்படும், குறிப்பாக, மலாய்க்காரர், இந்தியர், சீனர் மற்றும் ஓராங் அஸ்லி சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சேவை மையத்தில் இருப்பர் என்று பாங் சோக் தவ் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனும், அவர்களின் நல்வாழ்வுமே தமக்கு முக்கியம் என்று குறிப்பிட்ட பாங் சோக் தவ், தேர்தல் கொள்கை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்பதில் ஐயமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலா குபு பாரு, கம்போங் அசாம் கும்பாங்கில் உள்ள டேவான் செர்பகுனா மண்டபத்தில் நடைபெற்ற வளைப்பந்துப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
கோலகுபு பாரு தொகுதியில் உள்ள ஒவ்வாரு சமூகத்தினரும் நன்மைப்பெற வேண்டும். அவர்களின் தொடர்பு வசதிக்காக அந்தந்த மொழிப்பேசக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் தனது சேவை மையத்தில் மக்களுக்கான உரிய சேவையையும், உதவிகளையும் வழங்கி வருவர் என்று பாங் சோக் தவ் உறுதி அளித்துள்ளார்.








