ஜோகூர், பாசீர் கூடாங் தொழிற்பேட்டையில் உள்ள கழிவு மேலாண்மை ஆலையில் ஏற்பட்ட இரசாயனக் கசிவு தொடர்பாக, அந்த ஆலையின் 34 வயதுடைய உரிமையாளர் மற்றும் 41 வயதுடைய மேற்பார்வையாளர் ஆகிய இருவரைப் போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.
சுற்றுச்சூழல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் சுற்றுச்சூழல் துறையின் டாக்டர் முகமட் ஃபாமி யுசோஃப் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இந்த ஆலையிலிருந்து வெளியேறிய அடர்ந்த ஆரஞ்சு-மஞ்சள் நிறப் புகை ஜொகூர் நீரிணைப் பகுதி முழுவதும் பரவியது. இலாக்கா நடத்திய முதற்கட்ட விசாரணையில், 1974 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிம விதிமுறைகளையும், கழிவு மேலாண்மை நடைமுறைகளையும் இந்த ஆலை பின்பற்றத் தவறியது கண்டறியப்பட்டது.
இருப்பினும், பாதிக்கப்பட்ட ஆலைக்கு அருகில் உள்ள பகுதிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட காற்றின் தரம் குறித்த சோதனையில், அபாயகரமான வாயுக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று டாக்டர் முகமட் ஃபாமி மேலும் தெரிவித்தார்.








