பேரா, தாப்பா, பீடோரில் உள்ள சட்டவிரோதக்குடியேறிகளின் தற்காலிக தடுப்பு முகாமிலிருந்து நேற்றிரவு தப்பி ஓடிய மியன்மார் நாட்டைச் சேர்ந்த 130 தடுப்புக் கைதிகளை பிடிப்பதற்கு மலேசிய குடிநுழைவுத்துறை தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியிருப்பதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார்.
அரச மலேசிய போலீஸ் படையின் உதவி மட்டுமின்றி பொது மக்களின் உதவியையும் குடிநுழைவுத்துறை நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தடுப்புக் கைதிகளை பிடிப்பதற்கு போலீஸ் படையின் சிறப்புப்பிரிவான கலாட் படை, மலேசிய தொண்டூழியப் பிரிவான ரேலா ஆகியவற்றின் உதவியுடன் 130 தடுப்புக்கைதிகளை பிடிப்பதற்கு 200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் களம் இறக்கப்பட்டுள்ளதாக ருஸ்லின் ஜுசோ தெரிவித்தார்.
மியன்மார், Rohingya சமூகத்தைச் சேர்ந்த 130 தடுப்புக்கைதிகள் முறையான ஆவணமில்லாததால் அந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாக ருஸ்லின் ஜுசோ மேலும் கூறினார்.








