சைபர்ஜெயா, மே 24-
காதல் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் 27 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவ்வாடவர் ஆண் ஒருவரிடம் பெண்ணாக நடித்து, காதலித்து அவருக்கு 12,000 வெள்ளி இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர், தான் ஆடவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டதாக போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து சந்தேகிக்கும் நபர் கைது செய்யப்பட்டதாக செபாங் மாவட்ட துணை போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் ஷான் கோபால் தெரிவித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி ' Tinder' இணையத்தளத்தின் மூலம் தம்மை அவ்வாடவர், பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் பிறகு அவர்கள் இருவரும் காதலில் ஈடுபட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக ஷான் கோபால் கூறினார்.
கிடைக்கப் பெற்ற புகாரை தொடர்ந்து, சந்தேகிக்கும் அவ்வாடவரை சைபர்ஜெயா-வில் கையும் களவுமாக பிடித்ததாகவும் இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஷான் கோபால் தகவல் வெளியிட்டார்.








