Mar 20, 2026
Thisaigal NewsYouTube
KLIA விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டு நடத்திய ஆசாமி பிடிபட்டான்
தற்போதைய செய்திகள்

KLIA விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டு நடத்திய ஆசாமி பிடிபட்டான்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை பின்னிரவு துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு, தப்பியோடிவிட்ட ஆசாமியை பிடிப்பதற்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வந்த நிலையில் அந்த ஆசாமி இன்று பிற்பகலில் பிடிபட்டுள்ளார்.

ஹபிசுள் ஹராவி என்று அடையாளம் கூறப்பட்ட 38 வயதுடைய அந்த ஆசாமி, துப்பாக்கிச்சூடு நடந்த 36 மணி நேரத்திற்குள் போலீஸ் பிடியில் சிக்கினார்.

அந்த நபர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளந்தான், கோத்தா பாருவில் கைது செய்யப்பட்டதை போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் உறுதி செய்துள்ளார்.

அந்த நபர், தாய்லாந்துக்கு தப்பி விடுவார் என்று சந்தேகத்தின் பேரில் நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருந்த வேளையில் அவர், கிளந்தானில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பிடிபட்டுள்ளார். அந்த நபரை கோலாலம்பூருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை துரிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை பின்னிரவு 1.30 மணியளவில் விமான நிலையத்தில் பயணிகளின் வருகைக்காக காத்திருக்கும் பகுதியில் நின்றிருந்த தனது மனைவியை நோக்கி அந்த ஆசாமி இரண்டு முறை துப்பாக்கினால் சுட்டார்.

அந்த இரண்டு துப்பாக்கி சூட்டில் ஒன்று குறி தவறி, அந்தப் பெண்ணின் மெய்க்காவலர் மீது பாய்ந்து கடும் காயத்திற்கு ஆளானார். அந்த மெய்க்காவலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதில் அந்தப் பெண் உயிர் தப்பினார்.

தனது மனைவியை விவகாரத்துக்கு விண்ணப்பித்துள்ள அந்த ஆசாமி, பயண நிறுவனம் ஒன்றில் தனது மனைவியுடன் முக்கிய பங்குதாரராக உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது கணவனால் தனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து காத்திருக்கிறது என்று அந்தப் பெண், ஏற்கனவே போலீசில் புகார் செய்துள்ள வேளையில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Related News