பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 29-
பள்ளிகளில் பல்லின கலாச்சாரங்கள் தொடர்பான போதனையை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும். அது தொடர்பான நூல்களை வாசிப்பதன் வழி, வருகின்ற தலைமுறையினரிடையே, ஒருவரை ஒருவர் நன்முறையில் புரிந்துக்கொள்ளும் போக்கை வளர்க்க முடியும் என மனித உரிமை அமைப்பான புசாட் கொமாஸ் வலியுறுத்தியுள்ளது.
மக்களிடையே எளிதில் இனம் மற்றும் சமயம் தொடர்பான விவகாரங்களை தூண்டிவிட்டு, அவர்களிடம் விரோத போக்கை ஏற்படுத்தும் செயல்களை முறியடிக்க அந்நடவடிக்கை அவசியமானதாகும் என்று அந்த அமைப்பின் இயக்குநர் ராயன் சுவா தெரிவித்தார்.
ஸ்வீடன், நியூசிலாந்து போன்ற நாடுகளில், சிறார்களிடம் கலாச்சாரம் மற்றும் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருவதை முன்மாதிரியாகக் கொண்டு, மலேசிய அரசாங்கமும் அவ்வாறு செயல்படுவது அவசியம் என்றாரவர்.
இதற்கு முன்பு, நாட்டிலுள்ள பல்லின சமயம் மற்றும் இனங்களின் முக்கியத்துவத்தை புலப்படுத்துகின்ற நூல்களை வாசிக்கும் கலாச்சாரம், சிறார்களிடையே வளர்க்கப்பட வேண்டுமென தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சில் பரிந்துரையை முன்வைத்திருந்தார்.
அது குறித்து கருத்துரைத்த ராயன் சுவா, நாட்டில் இனங்களிடையிலான ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் சிறு நெப்போலியன்-கள் போன்ற தரப்பினரின் செயல்களுக்கு தடைவிதிக்கும் வகையில் அரசாங்கம் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.








