சிலாங்கூர், மே 04-
ஒரு வர்த்தகர் என்ற முறையில் தாம் கடன்பட்டு இருப்பது உண்மையே. ஆனால், வட்டி முதலைகளிடம் அல்ல என்று கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிடும் கைருல் அஸ்ஹரி சௌத் இன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
Ah Long என்று கூறப்படும் சட்டவிரோத வட்டி முதலைகளிடம் தாம் கடன் பெற்று இருப்பதாகவும், தம்முடைய ATM வங்கி அட்டையை வட்டி முதலைகள் பிடித்து வைத்திருப்பதாகவும் போன்ற ஓர் அவதூறான பிரச்சாரத்தை இந்த இடைத் தேர்தலில் எதிர்தரப்பினர் தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த இடைத் தேர்தலில் தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும், நம்பகத்தன்மையை சிதைக்க வேண்டும் என்ற தீய நோக்கில் திட்டமிட்டு இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்..
நேற்று கெர்லிங்கில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, நிருபர்கள் எழுப்பிய சரமாரியான கேள்விகளுக்கு தாம் பதில் அளிக்காததற்கு முக்கிய காரணம், தேவையற்ற விவகாரங்களில் கவனம் செலுத்தக்கூடாது என்பதே தவிர பதில் அளிக்க முடியாது என்பது அல்ல என்று கைருல் அஸ்ஹரி சௌத் விளக்கம் அளித்துள்ளார்.








