சமூக நீதி மற்றும் அனைத்துலக தொழிலாளர் தரநிலைகளை மேம்படுத்தும் நோக்கில், அனைத்துலக தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ.வின் ‘சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணியில்’ மலேசியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. மலேசியாவின் இந்த பங்களிப்புக் கடிதத்தை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், ஐ.எல்.ஓ. தலைமை இயக்குநர் கில்பர்ட் எஃப். ஹூங்போவிடம் இன்று சமர்ப்பித்தார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் 114-வது அனைத்துலக தொழிலாளர் மாநாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஐ.எல்.ஓ.வின் கொள்கைகளுக்கு ஏற்ப, தொழிலாளர் பாதுகாப்பை விரிவுபடுத்தவும், உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மலேசியா கடமைப்பட்டுள்ளது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
மேலும், மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு மற்றும் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையில் தொழில்துறை உறவுகளை வலுப்படுத்த இணக்கமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.








