போர்ட்டிக்சன் வட்டாரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக தனது தந்தையின் பாலியல் பலாத்கார செயலினால் பாதிக்கப்பட்டு வந்த 20 வயது பெண்ணுக்கு நல்லுரைகள் வழங்கப்பட்டு, அந்த கசப்பான சம்பவத்திலிருந்து மீள்வதற்கு உயரிய வழிகாட்டல்கள் வழங்கப்படும் என்று நெகிரி செம்பிலான் மாநில சமூக நல இலாகா அறிவித்துள்ளது.
தற்போது மனபாதிப்பில் இருக்கும் அந்தப் பெண்ணின் தேவையை அடிப்படையாக கொண்டு அவருக்கு நல்லுரை சேவைகள் வழங்கப்படும் என்று மாநில சமூக நல இலாகாவின் இயக்குநர் ரோஸ்னா சர்டி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தற்போது உறவுக்காரர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து எம்மாதிரியான பாதுகாப்பு வழங்கப்படுவது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.
தனது 12 வயதிலிருந்து தந்தையின் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருவதாகவும், இரண்டு பிள்ளைகளை பிரசவித்து இருப்பதாகவும் அந்தப் பெண் கடந்த மே முதல் தேதி போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அப்பெண்ணின் தந்தையின் வக்கிர செயல் அம்பலமானது.
தாம் பிரசவித்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர் இறந்து விட்டதாகவும், மற்றொருவரான 3 வயது பெண் பிள்ளை உயிருடன் இருப்பதாகவும் அந்தப் பெண் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.








