துப்புரவு பெண் பணியாளர் ஒருவரை மிரட்டி, பணம் பறித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜோகூர், ஶ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அந்தஸ்தை கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் 7 கீழ் நிலை போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு 9.32 மணியளவில் கிடைக்கப்பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எட்டு போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.
செரி அலாம் மாவட்ட போலீஸ் நிலையத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மாது ஒருவரை மிரட்டி 32 ஆயிரம் வெள்ளியை பெற்றதாக கூறப்படும் புகாரின் அடிப்பபடையில் அந்த எண்மரும் கைது செய்யப்பட்டதாக கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.
குற்றவியல் சட்டம் 384 ஆவது பிரிவின் கீழ் அந்த எட்டு போலீஸ்காரர்களும் விசாரணைக்காக நான்கு நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் குமார் தெரிவித்தார்.
அரச மலேசிய போலீஸ் படையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் விட்டுக்கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என்பதையும் கமிஷனர் குமார் விளக்கினார்.








