நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து, காட்மண்டுவை தளமாகக் கொண்ட ஃபிஷ்டேல் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம் மூலம் பயணம் மலேசியாவைச் சேர்ந்த 17 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுயிருப்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.
நேபாள–சீனா எல்லையில் e பகுதியில் உள்ள கைலாஷ் மானசரோவர் யாத்ரீக பயணத்திற்காக 17 மலேசியர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 20 சுற்றுலாப் பயணிகள் ஆறு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டதாக ஃபிஷ்டேல் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நாராயண் பிரசாத் போகிரேல் தெரிவித்தார்.
அவர்களுடன் சென்ற நிறுவன பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களும் தற்போது தொடர்பு இழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணி கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டதுடன், டிரோன் மூலமாகவும் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது என்று திசைகளிடம் விவரித்தார்.
இதுவரை காணாமல் போன மலேசியர்களையோ, மற்ற சுற்றுலாப் பயணிகளையோ, ஓட்டுநர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை.
எனினும், அவர்கள் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையை கைவிடவில்லை என்றும், தேடுதல் நடவடிக்கை தொடரும் என்றும் நாராயண் பிரசாத் போகிரேல் தெரிவித்தார்.








