நெகிரி செம்பிலான், ஏப்ரல் 30-
நெகிரி செம்பிலான், சிரம்பானில் 5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில், ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் லோரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று மாலை 5.55 மணியளவில் ஜாலான் சிரம்பான்- தம்பின் சாலையில், 74 வயதுடைய அம்முதியவர் செலுத்திய புரோட்டான் வீரா வாகனம் பழுதானதால், அவர் வாகனத்திற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்தார்.
அம்முதியவருக்கு உதவி செய்வதற்காக மோட்டார்சைக்கிளொட்டி ஒருவர் அங்கு நின்ற போது, ஹூண்டாய் கெட்ஸ் ரக காரில் வந்த ஆடவர், புரோட்டான் வீரா வாகனத்தை மோதியுள்ளார்.
அதன் பின்னர், ஹினோ ரகலோரி ஓட்டுநர் சாலையின் வலது பக்கம் தனது லோரியை செலுத்த முற்பட்ட போது, தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று, அந்த லோரியை பின்னாலிருந்து மோதியதாக, சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் முகமட் ஹட்டா சே தின் தெரிவித்தார்.
முன்னே நகர்ந்து சென்ற ஹினோ ரக லோரி, புரோட்டான் வீரா-வையும் அதன் ஓட்டுநரையும் மோதியதால் அவர் கடுமையான காயங்களுக்கு இலக்கானார். அந்த விபத்தில் சிக்கிய எஞ்சிய அனைவரும் பலத்த காயமின்றி உயிர் தப்பியதாக அவர் கூறினார்.








